மணல் கடத்தல்: மணல் குவாரியை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
எட்டயபுரம்: எட்டயப்புரம் அருகே வைப்பாற்றில் உள்ள மணல் குவாரியை முற்றுகையி்ட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துககுடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா வைப்பாற்று அய்யன்ராஜபட்டியில் அரசு மணல் குவாரி உள்ளது. இது தூத்துக்குடி-விருதுநகர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இங்கு அரசு அனுமதித்ததை விட அதிகமாக மணல் அள்ளுவதால் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்றும், அதனால் அதிகமாக மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறி நேற்று அய்யம்பட்டி கிராம மக்களும், சிபிஎம் கட்சியினரும் மணல் குவாரியை முற்றுக்கையிட்டனர்.
இதில் விருதுநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், சாத்தூர் நகர செயலாளர் முத்து, தாலுகா துணை செயலாளர் சுவாமிநாதன், சித்துவம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பால்ராஜ் ஆகியோர் தலைமையில் மணல் அள்ள வந்த லாரிகளை விட மறுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு வந்த நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டன.
இது குறி்த்து தகவல் அறிந்த விளாத்திகுளம் டிஎஸ்பி சாகுல் கமீது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும் அவர்கள் லாரிகளை விட மறுத்தனர். இதனால் மறியல் செய்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிஎஸ்பி சாகுல் கமீது லாரிகளை விடாவிட்டால் அனைவரையும் சுட்டுத் தள்ளிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து போலீசார் மறியல் செய்த 25 பேரை கைது செய்து மாசார்பட்டியிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதையறிந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மண்டபத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 25 பேரும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.