இலவச கலர் டிவி திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களின் பதவிக் காலம் முடிந்தது
நெல்லை: தமிழகத்தில் திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதால் அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இவர்கள் அடுத்து அதிமுக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
மொத்தத்தில் இலவசத் திட்டங்கள் தொடர்பான பணிகளுக்கே இவர்கள் மாறி மாறி போய் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு பொதுமக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை காண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை கலெக்டர் நியமிக்கப்பட்டனர்.
இது தவிர ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திற்கும் கலர் டிவி சிறப்பு வருவாய் உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கலர் டிவிகளை வாங்கி குடோனில் ஸ்டாக் வைத்தல், அந்தந்த கிராமங்களில் இருந்து தந்துள்ள ஒதுக்கீடுகளை பொறுத்து கலர் டிவிக்களை ஒதுக்கீடு செய்தல், ஆகிய பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 24 மாவட்டங்களில் துணை கலெக்டர்களும், 30 மாவட்டங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கணிணி இயக்குனர்கள், டிரைவர்கள் கலர் டிவி பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
இது தவிர தாலுகா அலுவலகங்களில் 208 உதவியாளர்களும், கணிணி இயக்குனர்களும், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர், இரண்டு உதவியாளர்களும் கலர் டிவி பிரிவில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதும் கலர் டிவி திட்டம் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கலர் டிவிக்களையும் அனாதை இல்லங்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டது.
இதனால் கலர் டிவி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் பதவிக்காலம் நேற்று ஜூ்ன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து தற்போது இந்த பிரிவை சிறப்பு திட்ட செயலாக்க துறையாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை இந்த திட்ட செயலாக்கத் துறைதான் கவனித்து செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.