மதுரை போலீஸ் கமிஷனர் மீது வழக்குப் பதிவு செய்ய மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அஏதில், 1997ம் ஆண்டு ராமநாதபுரத்தில் கண்ணப்பன் பணியாற்றியபோது அவரும், ஐந்து போலீஸாரும் சேர்ந்து தன்னையும், தனது நண்பர் பழனி என்பவரையும் மிரட்டி கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணின் கொலைக்கு நாங்களே காரணம் என்று கூறுமாறு மிரட்டினர். ஆனால் கொலையுண்டதாக கூறப்பட்ட பெண் 2002ம் ஆண்டு உயிருடன் திரும்பி வந்தார்.
எனவே மனித உரிமை சற்றும் இல்லாமல், எங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கண்ணப்பன் மற்றும் ஐந்து போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பின்னர் அப்போது ராமநாதபுரம் எஸ்.பியாக இருந்த கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் மாதவன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் தசரதராஜன், ஏட்டுக்கள் ராஜாமணி மற்றும் சாமித்துரை ஆகியோர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு சிபிஐ பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில்தான் கண்ணப்பன் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிருஷ்ணசாமி வழக்குத் தொடர்ந்தார்.
கிருஷ்ணசாமியின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் பிறப்பித்த உத்தரவின்போது சிபிஐக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், சிபிஐயின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. வெறும் துறை ரீதியிலான நடவடிக்கை என்பது போதுமானதாக இல்லை. இந்த அதிகாரிகள் நடந்து கொண்ட மனித உரிமைகளுக்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது. மேலும், ஒருவர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.
மேலும், சிபிஐ பரிந்துரையை அப்படியே கடைப்பிடித்துள்ள உள்துறைச் செயலாளரின் நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது. குற்றச்சாட்டுக்குள்ளான காவல்துறை அதிகாரிகள் மீது மனித உரிமைகளை மீறியது தொடர்பான நடவடிக்கையை அவர் எடுக்காதது சரியல்ல. மேலும், இந்த அதிகாரிகள் குறித்து கடந்த 2007ம் ஆண்டு கோர்ட் பிறப்பித்த உத்தரவுகளையும் உள்துறை செயலாளர் கவனத்தில் கொள்ளால் கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார்.
மேற்கண்ட காவல்துறை அதிகாரிகள் மீது மனித உரிமைகளை மீறியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டார்.