சொத்துக் குவிப்பு புகாரை விசாரிக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்: குமாரசாமி
இது குறித்து குமாரசாமி பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நானும், எனது குடும்பத்தாரும் ரூ. ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டில் உண்மை என்பதே இல்லை. நாங்கள் யாரும் சட்டவிரோதமாக சொத்து சேர்க்கவில்லை.
எனது பெயர் மற்றும் எனது தந்தை தேவேகவுடா, சகோதரர் ரேவண்ணா உள்ளிட்ட எனது குடும்பத்தார் பெயர்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி வாங்கியவை. கடந்த 3 ஆண்டுகளாக நான் எதியூரப்பாவின் ஊழல், மோசடிகளை மக்களுக்கு தெரிவித்து வருகிறேன்.
இதுவரை நான் வெளியிட்டுள்ள எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் முதல்வர் எதியூரப்பா பதில் அளிக்கவில்லை. எதியூரப்பா என் மீது குற்றம்சாட்டுவதற்காகவே அரசு சார்பில் சம்பளம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தி அவர்களுக்கு அமைச்சர்களுக்கு இணையான அதிகாரத்தை அளித்துள்ளார். அவர்களுக்கு என் மீது ஏதாவது குற்றம் சுமத்துவது தான் வேலை.
எதியூரப்பா எனது குடும்பத்திற்கு எதிராக மக்களை திசை திருப்புவதற்காகவே பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவ்வாறு நாங்கள் சட்டவிரோதமாக சொத்து குவித்து வைத்திருந்தால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டும் என்று எனது தந்தை கூறியிருந்தார்.
என் மீதும், எனது குடும்பத்தார் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இன்னும் வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும். அடுத்த 3 மாத காலத்திற்குள் விசாரணையை முடித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். யார் விசாரணை நடத்தினாலும் எங்களுக்கு சம்மதம் தான்.
அவ்வாறு ஒரு வாரத்திற்குள் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றால் நான் வரும் 8-ம் தேதி முதல் விதான்சவுதா முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். நான் ஒரு சர்க்கரை நோயாளி. எனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன் என்றார்.
புகார்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை: எதியூரப்பா
இதற்கிடையே, கர்நாடக முதல்வர் எதியூரப்பா இனி எதிர்கட்சித் தலைவர்கள் எழுப்பும் புகார்களுக்கெல்லாம் பதில் அளிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எதிர்கட்சித் தலைவர்கள் கூறும் புகார்களுக்கு எல்லாம் இனி பதில் அளிக்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். வளர்ச்சிப் பணிகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் தான் பதில் அளிப்பேன்.
மற்ற பிரச்சனைகள் குறி்த்த புகார்களுக்கு இனி கட்சி தலைவர் மற்றும் பொறுப்பாளர் தான் பதில் அளிப்பார்கள் என்றார்.