வலுவிழந்தது செக்ஸ் புகார்: ஐஎம்எப் முன்னாள் தலைவர் ஸ்ட்ராஸ் கான் விடுதலை!
நியூயார்க்: செக்ஸ் புகாரில் கைது செய்யப்பட்ட ஐஎம்எப்பின் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஓர் ஓட்டலில் தங்கி இருந்தார் சர்வதேச நிதி அமைப்பு எனப்படும் ஐஎம்எப் முன்னாள் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான்.
அங்கு அவரது அறையை சுத்தம் செய்ய வந்த தன்னிடம் அவர் தகாதமுறையில் நடந்து கொண்டதாக ஓட்டல் பணிப்பெண் குற்றம் சாட்டினார். அதன்பேரில், ஸ்ட்ராஸ்கான் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க் நகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சர்வதேச நிதிய தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், தன்னை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கக்கோரி அவர் மன்ஹட்டனில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அவரது மனுவை அரசு வக்கீல் எதிர்க்கவில்லை. மேலும், பணிப்பெண்ணின் வாக்குமூலத்தில் உள்ள குறைபாடுகள் காரணமாக, வழக்கு பலவீனமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இதையடுத்து, ஸ்ட்ராஸ்கானை விடுவிக்க நீதிபதி மைக்கேல் ஓபஸ் உத்தரவிட்டார்.
இதன்படி, ஸ்ட்ராஸ்கான் அமெரிக்காவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என உத்தரவிடப்பட்டது.