இலவச கலர் டிவி திட்ட ஊழியர்கள் பதவிக் காலம் 3 மாதம் நீட்டிப்பு: அரசு உத்தரவு
நெல்லை: தமிழகத்தில் இலவச கலர் டிவி திட்ட பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் பதவிக்காலத்தை 3 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பொதுமக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் துணை கலெக்டர்களும், தாலுகா அளவில் கலர் டிவி சிறப்பு ஆர்.ஐ.க்களும் நியமிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் தற்போது 24 மாவட்டங்களில் துணை கலெக்டர்களும், 30 மாவட்டங்களில் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கணிணி இயக்குபவர்கள், டிரைவர்கள் கலர் டிவி பிரிவில் பணியாற்றி வருகின்றனர். தாலுகா அலுவலகங்களில் 208 உதவியாளர்கள், கம்யூட்டர் இயக்குனர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஒரு கண்காணிப்பாளர், 2 உதவியாளர்கள் இப்பிரிவில் பணியாற்றுகின்றனர்.
இந்த இலவச கலர் டிவி பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிவடைந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் இப்பிரிவு தொடர்ந்து 3 மாதங்கள் செயல்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இலவச கலர் டிவிக்கள் ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு வழங்கப்படும் என்றும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்ட செயலாக்க துறை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இலவச கலர் டிவிக்களை ஆதரவற்ற இல்லங்களுக்கு வழங்கும் பணிகளை மேற்கொள்ளவும், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு முன்னோட்ட பணிகளை நடத்தவும் இலவச கலர் டிவி திட்ட ஊழியர்கள் பயன்படுத்தப்படுவர் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.