புதிய அட்டவணை: நெல்லை, திருச்செந்தூர் ரயில் நேரங்கள் மாற்றம்
திருச்செந்தூர்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சில ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று புதிய கால அட்டவணை வெளியிட்டது. அதன்படி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை-சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் இது நாள் வரை நெல்லையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைந்தது. ஆனால் இன்று முதல் நெல்லையில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இதேபோல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழன் தோறும் இரவு 7.15 மணிக்கு புறப்பட்டது. இனி இந்த ரயில் இரவு 7.35 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.
நெல்லை மார்க்கமாக செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் ரயில், அனந்தபுரி ரயில் உள்ளிட்ட ரயில்களின் புறப்படும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொத்ததில் தமிழகத்தில் 28 ரயில்களின் வருகை, புறப்பாடு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.