லோக்பால் மசோதா: நாடாளுமன்றத்திற்கு வராமல் சமூக ஆர்வலர்களிடம் போனது ஏன்?-கட்சிகள் கண்டனம்
டெல்லி: லோக்பால் மசோதா குறித்து முதலில் நாடாளுமன்றத்தில்தானே அரசு விவாதித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சமூக ஆர்வலர்களிடம் அரசு முதலில் பேசியது ஏன் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசைக் கண்டித்துள்ளன.
லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியிருந்தார். நேற்று இரவு நடந்த இக்கூட்டத்தில் மத்திய அரசை பல்வேறு கட்சிகளும் கண்டித்தன.
நாடாளுமன்றம்தான் மசோதாவை நிறைவேற்ற, இயற்ற முழு உரிமை படைத்த அதிகாரம் பெற்ற அமைப்பு. எனவே அரசு முதலில் அங்குதான் இதுகுறித்து விவாதித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு சமூக ஆர்வலர்களிடம் அரசு முதலில் பேசியது மிகப் பெரிய தவறு என்று அக்கட்சிகள் அரசைக் கண்டித்தன.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் எந்தவிதமான கருத்தொற்றுமையும் ஏற்படவில்லை.
கூட்டத்திற்குப் பின்னர் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் வலுவான, உருப்படியான லோக்பால் மசோதாவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவானது.
நடைமுறை விதிமுறைகளின் அடிப்படையில் இந்த சட்ட மசோதா இருக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
லோக்சபா எதிர்க்கட்சி் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறஉகையில், வலிமையான லோக்பாலை பாஜக ஆதரிக்கிறது. ஆனால் அந்த மசோதாவை முதலில் மழைக்காலக் கூட்டத் தொடரில் அரசு தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் அது லோக்சபா நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பிறகு அந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மாநில அரசுகள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்டோரின் யோசனைகள், கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற வழி கிடைக்கும் என்றார்.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தொடக்கமாக பேசுகையில், லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது. இதில் எந்த மறைமுகமும் இல்லை. சட்டத்திற்கு உட்பட்ட வசதிகளுடன் கூடியதாக லோக்பால் இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்டு அது அமைய வேண்டும் என்பதே அரசின் விருப்பமாகும் என்றார்.