அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக அதிமுக பிரமுகர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்
சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
உடுமலை ராதாகிருஷ்ணன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். அதிமுக நிர்வாகி ஆவார். அன்னை கேபிள் டிவி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கேபிள் டிவியை சில தனியார் நிறுவனங்கள் தங்கள் கைகளில் வைத்து ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்க கடந்த திமுக ஆட்சியில் அரசு கேபிள் டிவி வாரியம் கொண்டு வரப்பட்டது. ஆனால் சில நிர்பந்தம் காரணமாக திமுக அரசு அதை கிடப்பில் போட்டது.
தற்போது பதவியேற்றுள்ள அதிமுக அரசு, அரசு கேபிள் டிவியைத் துவங்குவதில் தீவிரமாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா இன்னும் 3 மாதத்தில் அரசு கேபிள் டிவி துவங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தன் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தன் வசம் உள்ள உள்துறைக்கு மாற்றியுள்ளார்.
அரசு கேபிள் டிவியை துவங்குவது குறி்த்து கேபிள் டிவி ஆபரேட்டர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக எம். ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
திருப்பூர் மாவட்ட அதிமுக இளைஞரணிச் செயலாளராக தற்போது உள்ளார் ராதாகிருஷ்ணன். அவரது நியமனம் தொடர்பான உத்தரவை தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ்பாபு திங்கள்கிழமை வெளியிட்டார்.
உடுமலை ராதாகிருஷ்ணன் 23 ஆண்டுகளாக அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறார். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.