தமிழ கோடீஸ்வர கந்து வட்டிக்காரர்கள் பட்டியல்-உளவுத் துறை தயாரிப்பு!
நெல்லை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கந்து வட்டி மூலம் கோடிக்கணக்கில் சொத்து குவித்த முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட போலீசார் குறித்து உளவுத் துறையினர் பட்டியல் தயாரித்து வருகி்ன்றனர்.
இது குறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில்,
தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துககுடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான நிலமோசடி, கந்து வட்டி மூலம் வீடுகள், நிலங்களை அபகரிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் டிஜிபி அலுவலகத்தில் குவிந்தன.
இதையடுத்து நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. அனைத்து மாவட்ட, மாநகர குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகங்களில் இந்த தனிப்படை இயங்கி வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மட்டும் இதுவரை 7 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட, மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி ராமனுஜம் உத்தரவி்ட்டுள்ளார். குற்றப்பிரிவில் துவக்கப்பட்ட தனிப்பிரிவு மூலம் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக 3 ஆயிரம் மனுக்கள் மீது முதல் கட்டமாக விசாரணை நடத்தி குறறவாளிகள், மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மோசடியாக அபகரிக்கப்பட்ட நிலங்கள், வீடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து ரகசிய தகவல்கள் சேகரித்து வரும் உளவுதுறையினர் அதை சென்னை உளவுத்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதனால் கந்து வட்டி, நில மோசடி மூலம் சொத்து குவித்த முக்கிய புள்ளிகள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.