கூடன்குளம் அணுமின் நிலையத்தில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் துவக்கம்: அதிகாரிகள் கண்காணிப்பு
வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் வெப்ப நீர் சோதனை ஓட்டம் தொடங்கியது. இதனை அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் அணு உலைக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து வி்ட்டன. இதை தொடர்ந்து மின் உற்பத்திக்கு முந்தைய வெப்பநீர் சோதனை ஓட்டம் நடத்த இந்திய அணுசக்தி ஒழுஙகுமுறை ஆணையம் கடந்த 29-ம் தேதி அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து கூடன்குளம் முதல் அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் தண்ணீரை வெப்பப்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு அதன் மூலம் மின் உற்பத்திக்கான ஜெனரேட்டர்களை இயக்க உதவும் வெப்ப ஆற்றல் கணக்கீடு செய்யப்படுகிறது.
இநத சோதனை ஓட்டத்தை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், ரஷ்ய விஞ்ஞானிகள், அணுமின் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள், கூடன்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மானிட்டர்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
45 நாட்கள் வரை தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை ஓட்டம் பிரச்சனையின்றி முடிந்து இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்தவுடன் அணு உலைக்குள் யூரோனியம் எரிபொருள் நிரப்பப்படும். அடுத்த கட்டமாக கிரிட்டிக்காலிட்டி எனப்படும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான பணி தொடங்கப்படும்.