சக்சேனாவை 5 நாள் போலீஸ் காவலில் எடுக்க மனு!
சேலத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு சினிமா வினியோகஸ்தர். தீராத விளையாட்டு பிள்ளை என்ற திரைப்படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை தருவதாக கூறி சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா ரூ.1.25 கோடி வாங்கியதாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது சக்சேனா மிரட்டியதாகவும் செல்வராஜ் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோர்ட்டில் இன்று ஆஜர்
இந்த வழக்கில், சக்சேனாவிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் மேரி ஜெயந்தி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்கிழமை) சைதாப்பேட்டை பெருநகர 23-வது கோர்ட்டில் வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் சக்சேனா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.