தனியார் பஸ்களில் ரூ 100 வரை கட்டண உயர்வு
சென்னை: டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் தனியார் பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பல்வேறு புகார்களை முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பியும் அரசு இதை கண்டுகொள்ளவே இல்லை என புகார் எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 24-ல் டீசல் விலை உயர்வு, 30-ம் தேதி கமிஷன் உயர்வு ஆகியவற்றை அடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.40.86 ஆக உயர்ந்துள்ளது. இதனால் லாரிகளில் வாடகை உயர்ந்துவிட்டது.
பஸ்களைப் பொருத்தவரை அரசு அறிவித்தால்தான் கட்டணத்தை உயர்த்த முடியும் என்ற நிலை இதுவரை இருந்து வந்தது.
ஆனால் சமீப காலமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் அந்தந்தப் பகுதியில் முடிவு செய்து கட்டணத்தை ரூ.1 முதல் ரூ.2 வரை உயர்த்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் இதுபோல தனியார் பஸ்களில் கட்டண உயர்வு இருந்தது.
அவ்வாறு வசூலிக்கக் கூடாது என்றும், வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட கட்டணம் குறையவே இல்லை.
எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பலரும் பஸ் உரிமையாளர்களாக இருப்பதால்தான் இதுகுறித்து அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஆம்னி பஸ்களில் ரூ 100 வரை உயர்வு
இப்போது டீசல் விலை உயர்வை அடுத்து நீண்டதூரம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ரயிலில் ஏ.சி. பயணத்தைவிட அதிகமாக சில ஆம்னி பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்போது அது மேலும் அதிகரித்துவிட்டது.
இப்போது காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தனியார் பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.