ராஜபக்சேவுக்கு எதிராக லண்டனில் வழக்கு தொடரும் தமிழ் அமைப்புகள்!
'சேனல் 4' தொலைக்காட்சியின் விடியோ ஆதாரம் மற்றும் நேரடி சாட்சிகளின் தகவல்களை அடிப்படையாக வைத்து அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவத் தளபதிகள் 9 பேருக்கு எதிராக வழக்கு தொடர லண்டனில் செயல்படும் தமிழர் அமைப்புகள் முயற்சி எடுத்து வருகின்றன.
ஆசிய மனித உரிமை மையம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்களும் இந்த முயற்சியில் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே ராஜபக்சே பிரிட்டன் சென்றபோது, அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரை விருந்தினராக அழைத்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகமே அவரை வேண்டாம் என்று கூறி நிகழ்ச்சியை ரத்து செய்தது. அந்த நேரத்தில் தமிழர் அமைப்புகள் போர்க்குற்ற வழக்கு தொடர லண்டன் கோர்ட்டில் அனுமதி் பெற்றன. விஷயம் தெரிந்ததும் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று அலறியடித்துக் கொண்டு ராஜபக்சே ஓட்டமெடுத்தது நினைவிருக்கலாம்.
இப்போது நார்வே, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ராஜபக்சே மீது போர்க்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அதற்கான சம்மன் சமீபத்தில் கொழும்பு அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.