திடீர் டிஸ்மிஸ்: விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து கழக டிரைவர்-கண்டக்டர்கள் மறியல்
விழுப்புரம்: எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நேற்று திடீர் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில் நுட்ப பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் டிரைவர் பயிற்சி கட்டணமாக ரூ. 750-ம், பணி பதிவேடு மற்றும் மருத்துவத்திற்காக ரூ. 5 ஆயிரத்து 600-ம் வசூலிக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பிறகு அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை பணிக்கு வந்தவர்களிடம் தற்போது வேலை இல்லை, தேவைப்பட்டால் அழைக்கிறோம் என்று அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர்களும், கண்டக்டர்களும் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நேற்று காலை 10 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட கண்டக்டர்கள் சேர்ந்து வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துகழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசம்பாவிதங்கள் நடக்காமல் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளித்தனர்.