2ஜி ஊழல்: சைப்ரஸ் நாட்டில் கிடைத்துள்ள முக்கிய ஆதாரங்கள்!
டெல்லி: 2ஜி முறைகேடு வழக்கில் முக்கிய ஆதாரங்கள் சிபிஐக்கு கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்களை சைப்ரஸ் நிதி நிறுவனங்கள் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பு கூறியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஸ்வான் டெலிகாம், யுனிடெக், ரிலையன்ஸ் ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் எப்படி ஆதாயம் அடைந்தன என்று சிபிஐ, அதிகாரிகளும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் ஊழல் பணத்தை கைமாற்றி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மொரீசியஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஏராளமான ஆதாரங்கள் சிக்கின. இந்த நிலையில் சைப்ரஸ் நாட்டில் உள்ள சில நிதி நிறுவனங்களிடமும் இந்திய தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சட்டவிரோத தொடர்புகளை ஏற்படுத்தி பயனடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சைப்ரஸூக்கு அதிகாரிகள் பயணம்:
இது குறித்து மேலும் விவரங்களை அறிய அமலாக்கப் பிரிவின் உயரதிகாரிகள் அடங்கிய குழு சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ளது.
இந்த ஊழலில் தொடர்புடைய நிறுவனங்கள் சைப்ரஸ் நாட்டில் செய்துள்ள முதலீடுகள் மற்றும் அவற்றின் பணப் பரிவர்த்தனைகளை புலனாய்வுக் குழுவினர் ஆய்வு செய்வர்.
இதற்கிடையே இதுவரை சைப்ரஸ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை 3வது குற்றப் பத்திரிகையில் சேர்க்கும் பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது.
சைப்ரஸ் சென்றுள்ள குழு டெல்லி திரும்பியுடன் இந்த வார இறுதிக்குள் ஸ்பெக்ட்ரம் வழக்கின் 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.