அசன் அலி பாஸ்போர்ட்: 1 வாரத்தில் ராஜினாமா செய்ய புதுச்சேரி கவர்னருக்கு மத்திய அரசு உத்தரவு
புனேவை சேர்ந்த குதிரைப் பண்ணை உரிமையாளரான அசன் அலி ரூ.45,000 கோடி அளவுக்கு ஹவாலா மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது தொடர்புகள் குறித்து அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின்போது இவருக்கு 1997ம் ஆண்டு பாஸ்போர்ட் வழங்க இக்பால் சிங் பரிந்துரை கடிதம் தந்தது தெரியவந்தது. அப்போது சிங் ராஜ்யசபா எம்பியாக இருந்தார்.
அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்குமாறு வெளிவிவகாரத் துறைக்கு சிங் சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல அசன் அலியின் நண்பர் காசிநாத் தபுரியா, அவரது மனைவி ஆகியோருக்கும் பாஸ்போர்ட் வழங்கும்படி சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார் சிங்.
நிழல் உலகத் தொடர்புகள், கறுப்புப் பண மோசடி, ஹவாலா பண பரிமாற்றம் என்று போலீஸ் ரெக்கார்டில் கறுப்புப் பட்டியலில் இருந்த அசன் அலிக்கு இக்பால் சிங்கின் பரிந்துரையால் பாஸ்போர்ட் கிடைத்தது. இதற்காக இக்பால் சிங்குக்கு அசன் அலி தரப்பிலிருந்து ஏராளமான பணமோ அல்லது வேறு வகையான உதவிகளோ கிடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 3 முறை புதுச்சேரி வந்து கவர்னர் மாளிகையில் வைத்து இக்பால் சிங்கிடம் விசாரணை நடத்திச் சென்றனர். இதையடுத்து சிங், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்து தனது தரப்பு நியாயத்தை விளக்கினார்.
ஆனால், கவர்னர் இக்பால்சிங் பதவி விலகக் கோரி புதுவையில் பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்தின. முழு டைப்பும் நடைபெற்றது. ஆனாலும் தொடர்ந்து பதவியில் தொங்கிக் கொண்டுள்ளார் சிங்.
இந் நிலையில் கடந்த 2ம் தேதி அவரை டெல்லிக்கு அழைத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், அவரை ஒரு வாரத்துக்குள் ராஜினாமா செய்யுமாறு கூறிவிட்டதாகத் தெரிகிறது.
எனவே இக்பால் சிங் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பதவி விலகினால், தமிழக கவர்னர் பர்னாலா புதுவை மாநில பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
இக்பால்சிங் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் புதுவை கவர்னராக பதவி ஏற்றார். அவருடைய 3 ஆண்டு பதவிக் காலம் விரைவில் முடிய இருக்கிறது. அதை ஒட்டி அவராகவே பதவி விலகுவது போல காட்டி, இந்த விவகாரம் பெரிய அளவில் வெடிக்காமல் மூடி மறைக்க மத்திய அரசு முயல்வதாகத் தெரிகிறது.
இதனால் தான் கடந்த 3 மாதங்களாக அவரை பதவியில் நீடிக்க விட்டதாகவும் தெரிகிறது.