பாதயாத்திரை: துப்பாக்கியுடன் ராகுல் காந்தியை நெருங்கியவர் கைது
பட்டாபர்சௌல்: உத்தர பிரதேசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன் பாதயாத்திரை துவங்கினார். மாநில அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வெடித்த பட்டாபர்சௌலில் இருந்து பாதயாத்திரையை துவங்கி கிராமம் கிராமமாகச் சென்று விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வரும் 9-ம் தேதி அலிகாரில் நடக்கும் விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் ராகுல் கலந்து கொள்கிறார். ஆனால் இந்த பஞ்சாயத்துக்கு மாயாவதி அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று 3-வது நாளாக தாப்பல் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடர்ந்தார். அப்போது ராகுல் காந்தியைப் பின்தொடர்ந்து அவரை நெருங்க முயன்ற மர்ம ஆசாமியை பிடித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அந்த நபர் கைத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் பெயர் ஹரிமோகன் சர்மா என்றும், அவர் ஒரு காங்கிரஸார் என்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அவரிடம் துப்பாக்கிக்கான உரிமம் இருந்தது. இதையடுத்து ராகுலின் பாதுகாப்பு அதிகாரிகள் ஹரிமோகனை உத்தரபிரதேச போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தால் பாதயாத்திரையில் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே இதேபோல சில மாதங்களுக்கு முன்பும் ராகுல் காந்தி பட்டாபர்செளல் வந்திருந்தபோது அங்கும் ஒரு நபர் துப்பாக்கியுடன் ராகுலுக்கு அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். தற்போது 2வது முறையாக ராகுல் காந்தியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது அவரது பாதுகாவலர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.