தமிழகத்தில் இருந்து அந்தமானுக்கு வெடிபொருள் கடத்தல் வழக்கு: மேலும் ஒரு சிவகங்கை நபர் கைது
சிவகங்கை: தமிழகத்தில் இருந்து அந்தமானுக்கு வெடிபொருள் கடத்திய வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் உள்ள துறைமுகத்துக்கு கடந்த மாதம் 21-ம் தேதி வந்த கன்டெய்னரில் 4 டிரம்கள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை சோதனையிட்டனர். அப்போது அதில் 10 ஆயிரம் கிலோ அமெனியம் நைரேட், 2 ஆயிரத்து 465 ஜெலட்டின்கள், 6 ஆயிரம் டெட்டனேட்டர்கள் மற்றும் 3 கிரீஸ் டின்கள் இருந்தன.
இது குறித்து அந்தமான போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போர்ட்பிளேரைச் சேர்ந்த எஸ்.வி.பாபு, பெங்கார்ராஜு, சென்னையைச் சேர்ந்த முத்துராஜா, பரமக்குடி பாரதி நகரைச் சேர்ந்த சுந்தரராஜன் மகன் செல்வம் ஆகியோரை சிக்கினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதில் செல்வத்திடம் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம், நாலுகோட்டையை அடுத்த கூவானிப்பட்டியில் உள்ள ஒரு வெடி மருந்துக் கிடங்கில் இருந்து வெடி மருந்துகளை வாங்கியது தெரிய வந்தது. உடனே இது குறித்து விசாரிக்க அந்தமான போலீசார் சிவகங்கை விரைந்தனர்.
அங்கு சிவகங்கை போலீசாருடன் சேர்ந்து அந்த வெடி மருந்துக் கிடங்கிற்கு சென்று அதன் நிர்வாகி அப்பாஸ் மந்திரி (55) என்பவரைக் கைது செய்தனர்.
ஆனால் அந்த வெடி மருந்துக் கிடங்கின் உரிமம் அப்பாஸ் மந்திரியின் மருமகன் அபுதாகிரின் பெயரில் உள்ளது.
அபுதாகிர் தனது வெடி மருந்துக் கிடங்கை நடத்த தனது மாமனாருக்கு அதிகாரம் வழங்கக் கோரி சென்னையில் உள்ள வெடிமருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். ஏற்கனவே அப்பாஸ் மந்திரி மீது பல வழக்குகள் இருப்பதால் அவருக்கு அதிகாரம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அபுதாகிர் உத்தரவை மீறி அப்பாஸை தனது வெடி மருந்துக் கிடங்கை நிர்வாகிக்கும் அதிகாரத்தை அளித்ததற்காக அவரை சிவங்கங்கை போலீசார் கடந்த 5-ம் தேதி கைது செய்தனர். அபுதாகிரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.