ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய சினி ஜோஸ், அஸ்வினி மீது நடவடிக்கை- ரயில்வே
டெல்லி: ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள வீராங்கனைகள் சினி ஜோஸ் மற்றும் அஸ்வினி அக்குன்ஜி ஆகியோர் மீதான பி சாம்பிள் முடிவுகளிலும் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ஊக்க மருந்து உட்கொண்டதாக இந்திய தடகள வீராங்கனைகள் மந்தீப் கெளர், சினி ஜோஸ், அஸ்வினி அக்குன்ஜி, தியாரா மேரி தாமஸ், ஜூவானா மர்மு, பிரியங்கா பன்வார், ஷாட்புட் வீராங்கனை சோனியா, நீளம் தாண்டும் வீரர் ஹரிகிருஷ்ணன் முரளீதரன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
இவர்களில் மந்தீப், சினி ஜோஸ், மர்மு, அக்குன்ஜி, பன்வார் ஆகியோர் மெத்தன்டியோனன் என்ற ஊக்க மருந்து சாப்பிட்டது ஏ சோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது. தியாரா மேரி தாமஸ், எபிமெத்தன்டியால் என்ற அனபாலிக் ஸ்டிராய்டை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீராங்கனைகள் இந்தியாவுக்காக காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவர்கள் ஆவர். இதனால் இந்தியாவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து வீராங்கனைகளுக்கு போட்டிக்கு முன்பாக இந்த ஸ்டிராய்டுகள் கலந்த சத்து மருந்தை கொடுத்தவர் என்று கூறப்பட்டும் இந்திய தடகள பயிற்சியாளரான உக்ரைனைச் சேர்ந்த யூரி ஓக்ரோட்னிக்கும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையி்ல, ரயில்வேயில் பணியாற்றி வரும் சினி ஜோஸ் மற்றும் அஸ்வினி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே விளையாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே விளையாட்டு வாரிய இயக்குநரக செயலாளர் மற்றும் செயல் இயக்குநர் ஜானியா திரிபாதி கூறுகையில், ஏ சாம்பிள் முடிவுகள்தான் தற்போது வந்துள்ளன. அதை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். இது மிகவும் சீரியஸான விஷயம். பி சாம்பிள் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஏற்கனவே இதுதொடர்பாக விளக்கம் கேட்டு வீராங்கனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
பி சாம்பிள் முடிவுகளிலும் அவர்கள் ஊக்க மருந்து உட்கொண்டது உண்மை என்று தெரிய வந்தால், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து சலுகைகளையும் திரும்பப் பெறுவோம்.
அவர்கள் தற்போது நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். எனவே வேலையிலிருந்து நீக்குவது தொடர்பான வழிமுறைகள் குறித்து சட்ட ஆலோசனைக்குப் பின்னரே முடிவெடுக்க முடியும் என்றார் அவர்.