சாத்தான்குளம் காமராஜர் சிலையில் ஏணி மாயம்: கண்டுபிடிக்க பிட் நோட்டீஸ்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலையின் கீழ் வைக்கப்பட்ட புத்தம் புதிய ஏணி திருடு போயுள்ளது. இதை கண்டுபிடிக்க பிட் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலை உள்ளது. அவரது பிறந்த நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியின் போது சிலைக்கு மாலை போட வருபவர்கள் ஏணியை வாடகைக்கு எடுத்து வருவார்கள். அங்கு நிரந்தரமாக ஏணி கிடையாது.
இதையடுத்து சாத்தான்குளம் லயன்ஸ் கிளப் தலைவர் தங்கராஜ், வர்த்தக சங்க தலைவர் சுந்தரானந்தபூபதி ஆகியோர் சார்பில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் புதிய ஏணி வாங்கப்பட்டு சிலை முன் நேற்று முன்தினம்(4-ம் தேதி) வைக்கப்பட்டது. இந்நிலையில் அன்றிரவே அந்த ஏணி மாயமாகி விட்டது.
இது பற்றி அறிந்த சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருடியவர்களை பிடிப்பதற்காக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்காமல் பிட் நோட்டீஸ் அடித்து திருடியவர்களை பிடிக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து உடனடியாக ஆயிரக்கணக்கான பிட் நோட்டீஸ்கள் அடிக்கப்பட்டது. அவற்றை நேற்று சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் விநியோகித்தனர். மேலும் பொதுமக்களிடமும் கொடுக்கப்பட்டது. அந்த நோட்டீசில் சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு வைத்திருந்த இரும்பு ஏணியை யாரோ எடுத்து சென்று விட்டனர். ஏணியை எடுத்து சென்ற கும்பல், எடுத்து செல்ல பயன்படுத்திய வண்டி டிரைவர், அதை விலைக்கு வாங்கிய நபர் போனறவைகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருட்டு போன ஏணியை கண்டுபிடிக்க பிட் நோட்டீஸ் அடித்து வினியோகித்திருக்கும் சம்பவம் சாத்தான்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.