2ஜி விசாரணையை திசை திருப்பும் அமைச்சர் முரளி தியோரா! - சிபிஐ புகார்
2 ஜி விவகாரத்தில் சட்டவிரோதமாக ஆதாயம் பெற்ற நிறுவனங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்ஸார் நிறுவனம் லூப் டெலிகாம் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளையும், வோடபோன் - எஸ்ஸாரில் 33 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
இந்த நிறுவனங்களின் தொடர்புகள், எந்த அளவு சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றன என்பது குறித்து சிபிஐ வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விசாரணை முடித்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், இதில் மூக்கை நுழைத்துள்ளது கம்பெனிகள் விவகாரத்துறை.
லூப் டெலிகாமில் எஸ்ஸாருக்கு 10 சதவீத பங்குகள் இல்லை என்றும், வெறும் 3 சதவீதம்தான் உள்ளதென்றும் கம்பெனிகள் விவகாரத்துறையின் அமைச்சர் முரளி தியோரா திடீரென அறிவித்துள்ளார்.
இது விசாரணையை திசை திருப்பும், தாமதப்படுத்தும் முயற்சி என்றும், முரளி தியோராவின் செயல் துரதிருஷ்டவசமானது என்றும் சிபிஐ உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளது.