அரசி கடத்தலைத் தடுக்க சுழற்சி முறையில் ரேஷன் ஊழியர் மாற்றம்!
சென்னை எழிலகத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் நேற்று உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மாவட்டத்தில் உள்ள உணவுத்துறை வழங்கல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு நடத்தினார்.
அரிசி கடத்தலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த ஆய்வில் பேசப்பட்டது.
இந்த கூட்டம் குறித்து, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்எண்ணெய்யின் அளவில் இருந்து 8 ஆயிரம் கிலோ லிட்டரை மத்திய அரசு குறைத்துள்ளது. எனவே, இதை ஈடுகட்டுவது தொடர்பாக, கடந்த 4-ந் தேதி முதல்வர் ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து, உணவுத்துறை அமைச்சர், மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன் இன்று வீடியோ கான்பரசிங் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இதனால், அதிகாரிகளுக்கு போக்குவரத்து செலவு இல்லாமல் போவதுடன், நேரமும் மிச்சமாகிறது. தமிழகத்தில், பகுதி நேர கடைகள் உள்பட 32 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து அரிசி கடத்தலை தடுக்க, ஆண்டுக்கு ஒருமுறை ரேஷன் கடை ஊழியர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்", என்றார்.