ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் யோசனையை நிராகரித்த தயாநிதி மாறன்
டெல்லி: 2006ம் ஆண்டு நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான விலை நிர்ணயத்தை அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கூறியபோது, அதை நிராகரித்து அவருடன் தயாநிதி மாறன் மோதினார் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் பி.சி.சாக்கோ கூறியுள்ளார்.
நேற்று நடந்த ஜேபிசி கூட்டத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அவருக்கும், அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்கும் மோதல் ஏற்பட்ட விவகாரம் விவாதத்திற்கு வந்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிசி தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், கடந்த 2006ம் ஆண்டு நிதியமைச்சகத்திற்கும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்திற்கும் இடையே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
அப்போது நிதியமைச்சகம் கூடுதல் அலைக்கற்றையை ஒதுக்குவது குறித்து தங்களுக்குள் விவாதித்து பின்னர் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைக்கு அதை அனுப்பி வைக்குமாறு செயலாளர்கள் கமிட்டியைக் கேட்டுக் கொண்டது.
மேலும் அமைச்சர்கள் குழுவே ஸ்பெக்ட்ரத்திற்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் நிதியமைச்சகம் விரும்பியது. ஆனால் அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தங்களது அமைச்சகத்தின் உரி்மை என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கருதியதால் அதை அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்க அவர் முன்வரவில்லை.
இதையடுத்து கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மட்டும் அமைச்சர்கள் குழு, மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைத்தது. விலை நிர்ணயத்தை அது விட்டு விட்டது என்றார் சாக்கோ..
2006ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.