ஊக்க மருந்து பிரச்சினை- பி சாம்பிளிலும் சிக்கினர் சினி ஜோஸ்,மர்மு, தியானா மேரி
இந்திய விளையாட்டுத்துறையை தலை குனிய வைத்துள்ளது இந்திய தடகள வீராங்கனைகள் ஊக்க மருந்து உட்கொண்டதாக சிக்கிய விவகாரம். மொத்தம் 6 பேர் இவ்வாறு சிக்கினர். இவர்கள் அனைவரும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றவர்கள் ஆவர்.
இவர்களிடம் நாடா எனப்படும் தேசிய ஊக்க மருந்து ஆய்வகம் நடத்திய ஏ சாம்பிள் ஊக்க மருந்து சோதனையில் 6 பேரும் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. பயிற்சியாளர் கொடுத்ததைத்தான் சாப்பிட்டோம் என்று வீராங்கனைகள் கூறியுள்ளனர். இதையடுத்து இந்திய தடகள அணியின் பயிற்சியாளர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நாடா எடுத்த பி சாம்பிள் சோதனையில் சினி ஜோஸ், ஜானா மர்மு, தியானா மேரி தாமஸ் ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று பேருக்கும் 2 ஆண்டுகள் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
பி சாம்பிள் முடிவுகள் இன்று மாலை வெளியாகின. மூவரில் சினி ஜோஸ் மற்றும் ஜானா ஆகியோர் மெதன்டியோனோன் என்ற மருந்தையும், மேரி தாமஸ், எபிமெத்தனாடியோல் என்ற மருந்தையும் உட்கொண்டதாக அவர்களது சிறுநீர் சாம்பிள் மூலம் தெரிய வந்துள்ளது. பெங்களூரில் ஜூன் 11 முதல் 14 நடந்த தேசிய மாநிலங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின்போது அவர்களுக்கு சோதனை மாதிரி எடுக்கப்பட்டது.
பி சாம்பிள் சோதனையிலும் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ள சினி ஜோஸ், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆவார். ஜானா மர்மு, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தவர்.
மேரி தாமஸ், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.