பெனாசிரை நான் காதலிக்கவில்லை, எனது 'கசின்'தான் காதலித்தார்-இம்ரான்
ஒரு காலத்தில் பிளே பாய் ஆக இருந்தவர் இம்ரான். உலகின் பல்வேறு பிரபலங்களுடன் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். அதேபோல அவருக்கும், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கும் இடையே காதல் இருந்ததாக ஒரு செய்தி முன்பு வெளியானது.
இம்ரான் கானின் சுயசரிதையை எழுதிய இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர், 1970ம் ஆண்டு இம்ரான் கான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். அப்போது பெனாசிரும் அங்கு படித்தார். அந்த சமயத்தில் இம்ரான் மீது பெனாசிருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இருவருக்கும் இடையே செக்ஸ் உறவும் கூட இருந்தது. இது இம்ரானின் தாயாருக்குத் தெரிய வரவே அவர் திருமணம் நடத்தி வைக்க முயன்றார். ஆனால் அது கை கூடவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்தத் தகவலை உடனடியாக இம்ரான் கான் மறுத்தார். இந்த நிலையில் இன்னொரு இம்ரான் கான் சுயசரிதை வெளியாகியுள்ளது. இதை இந்தியாவைசத் சேர்ந்த பிராங்க் ஹூசூர் என்பவர் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக ஹூசூரிடம் இம்ரான் கான் கூறுகையில், எனக்கும், பெனாசிருக்கும் இடையே இருந்தது பரஸ்பரம் அன்புதான். இருவருக்கும் இடையே இருந்தது அது மட்டுமே. வேறு எதுவும் இல்லை. இருவரும் நல்ல அன்பு வைத்திருந்தோம், நல்ல நண்பர்களாக இருந்தோம்.
பெனாசிர் எனது தனிப்பட்ட தோழி. என்னை அவர் மிகவும் மதித்தார். எனது உள் உணர்வுகளை மதித்தார். அதேசமயம், எனது ஒன்று விட்ட சகோதரர் ஒருவருக்கு பெனாசிர் மீது ஈர்ப்பு இருந்தது. அவரை நான் பெனாசிருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அதன் பின்னர் பெனாசிருக்கும் கூட அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. திருமணப் பேச்சுக்கள் கூட எழுந்தன. ஆனால் அது கை கூடவில்லை.
அவருக்கு அரசியல் மீது ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அரசியல் அவரைத் தேடி வந்தபோது அதற்கேற்றபடி மாறிக் கொள்ள அவரால் முடிந்தது. பாகிஸ்தானின் மிகப் பெரிய தலைவராக அவர் திகழ்ந்திருக்க வேண்டியவர். துரதிர்ஷ்டம் அவரை துரத்திக் கொண்டு வந்ததால் அது முடியாமல் போய் விட்டது. இடி முழக்கம் போல பேசக் கூடியவர் பெனாசிர். அது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று. அவரிடம் அது இருந்தது. தனது பேச்சால் அத்தனை பேரையும கட்டிப் போடும் திறமை படைத்தவர் பெனாசிர் என்று கூறியுள்ளார் இம்ரான்.