தொலைபேசி ஒட்டுக் கேட்பு: மூடப்படும் 168 ஆண்டு கால பிரிட்டிஷ் பத்திரிக்கை!
இதையடுத்து அந்தப் பத்திரிக்கையையே மூடுவதாக அதன் உரிமையாளரான ருப்பர்ட் முர்டாக் அறிவித்துள்ளார். நியூஸ் கார்பரேசன் என்ற குழுமத்தின் கீழ் பல்வேறு கண்டங்களில் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், வார இதழ்களை நடத்தி வருபவர் முர்டாக்.
சமீபத்தில் இந்தப் பத்திரிக்கை தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது. ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் வீரர்களின் குடும்பத்தினரின் தொலைபேசிகள், இ-மெயில்களை இந்த பத்திரிக்கையின் நிருபர்கள் 'ஹேக்' செய்து தகவல்களைப் பெற்று அவர்கள் குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட்டனர். இதற்காக காவல் துறையினருக்கு லட்சக்கணக்கில் லஞ்சமும் கொடுத்தனர்.
கொல்லப்பட்ட 13 வயதே ஆன ஒரு சிறுவனனின் வீட்டு தொலைபேசியையும் ஒட்டுக் கேட்டதாகவும் புகார் உள்ளது.
அதைவிடக் கொடுமையாக, ஒரு கடத்தப்பட்ட பெண்ணின் வாய்ஸ்-மெயிலையும் ஹேக் செய்த நிருபர்கள், அதிலிருந்த சில முக்கிய தகவல்களை அழித்தனர். இதனால் அந்தப் பெண்ணை கடத்தியவரைப் போலீசாரால் பிடிக்க முடியாமல் போனது. போலீசாரிடம் சிக்காமல் இருந்த அந்த நபர், கடத்திய பெண்ணை கொலை செய்தார். மேலும் இரு பெண்களையும் கொன்ற பின்னரே அந்த நபர் பிடிபட்டார். வாய்ஸ்-மெயில்களை அழிக்காமல் இருந்திருந்தால், 3 பெண்களுமே காப்பாற்றப்பட்டிருப்பர்.
இது தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து பத்திரிக்கைக்கு இங்கிலாந்தில் கடும் கண்டனம் கிளம்பியது. மேலும் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் பங்குகளும் கடும் வீழ்ச்சியடைந்தன. இதையடுத்து இந்தப் பத்திரிக்கையையே வரும் ஞாயிற்றுக்கிழமையோடு மூடுவதாக ருப்பர்ட் முர்டாக் அறிவித்துள்ளார்.
தவறு செய்த பத்திரிக்கையாளர்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திடீரென பத்திரிக்கையையே மூடுவதாக அவர் அறிவித்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. 1969ம் ஆண்டு இந்த பத்திரிக்கையை முர்டாக் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் பிரபலமான கட்டண டிவியான பிரிட்டிஷ் ஸ்கை பிராட்காஸ்டிங் என்ற நிறுவனத்தை ரூ. 60,000 கோடிக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளார் முர்டாக். இந் நிலையில், இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் வெடித்ததால், இந்த நிறுவனத்தை வாங்க அவருக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் தருவதில் சிக்கல் எழுந்தது.
பெருத்த லாபத்தைத் தரும் இந்த கட்டண டிவி நிறுவனத்தை வாங்குவதில் குறியாக உள்ள முர்டாக், இதற்குத் தடையாக உள்ள பத்திரிக்கையையே மூடிவிடத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.
பிரிட்டிஷ் பிரதமரின் முன்னாள் உதவியாளர் கைது:
இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்பில் முக்கிய பங்காற்றியதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஆண்டி கெளல்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேமரூனின் செய்தித் தொடர்பாளராவதற்கு முன் இவர் நியூஸ் ஆப் த வோர்ல்ட் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். அப்போது தான் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்புகள் நடந்துள்ளன.