கழுத்து, தோள்பட்டை வலியால் கனிமொழி அவதி-மருத்துவ படுக்கை, தலையணை கோருகிறார்
டெல்லி: கழுத்து வலி மற்றும் தோள்பட்டை வலியால் கனிமொழி அவதிப்படுகிறாராம். இதற்கு நிவாரணம் தேடுவதற்காக மருத்துவ முறையிலான தலையணை மற்றும் படுக்கை தருமாறு கோரி அவர் சிறப்பு சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தனக்கு கழுத்து வலி, தோள்பட்டை வலி இருப்பதாகவும், அதை சரி செய்ய மருத்துவ ரீதியிலான படுக்கை மறறும் தலையணை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நேற்றுப் பரிசீலித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, சிறை விதிமுறைகளுக்குட்பட்டு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு திஹார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து விரைவில் பரிசீலித்து திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி கழுத்து வலி காரணமாக கழுத்தை அடிக்கடி பிடித்தபடியும், நீவி விட்டபடியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 மாதங்களாக சிறையில் அடைபட்டுள்ளார் கனிமொழி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் கூட்டுச் சதியாளராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.