ஜப்பானில் மீண்டும் பூகம்பம்... 7.3 ரிக்டர் பதிவானது... மக்கள் பீதி
ஜப்பானில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஏற்பட்ட பெரும் பூகம்பம் மற்றும் சுனாமியிலிருந்தே இன்னும் ஜப்பான் மீளவில்லை.
இந்த நிலையில் ஜப்பானின் இவாட் மாகாணத்தில் உள்ள ஹோன்ஷு தீவில் இன்று காலை 9.57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பயந்துபோன மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து வீடுகளுக்கு திரும்பினர்.
இதற்கிடையே, கடல் அலைகள் வழக்கத்தை விட சுமார் 50 செ.மீட்டர் உயரத்துக்கு எழும்பி ஆர்ப்பரித்தன.
எனவே, பசிபிக் கடல் பிராந்தியம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்ட புகுஷிமா, இவாடே, மியாகி ஆகிய இடங்களில் உள்ள அணு உலைகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அணுஉலைகள் வெடிக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் தங்களுக்கு இது பற்றிய தகவல் எதுவும் வரவில்லை என டோக்கியோ அணுமின் நிறுவனம் அறிவித்துள்ளது. இருந்தும் முன் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், அணுஉலைகளை குளிர்வித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் கடற்கரை பகுதியில் பூமிக்கு கீழே 10 கி. மீட்டர் ஆழத்தில் உருவானதாக தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நில நடுக்கம் மற்றும் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத மதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.