பத்மநாபசாமி கோவில் நகைகள் அரசுக்கோ பக்தர்களுக்கோ சொந்தமானதல்ல! - கேரள ராணி பேட்டி
திருவனந்தபுரத்தில் உள்ள பழமையான பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய நிலவறைகள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 5 அறைகள் திறக்கப்பட்டபோது, அதில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் குவியல் குவியல்களாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 6-வது அறையை திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. பத்மநாபசாமி கோவிலை கேரள அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறி இருந்தது. இதை எதிர்த்து திருவாங்கூர் சமஸ்தான இளவரசர் ராஜ மார்த்தாண்ட வர்மா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவிலுக்கு திருவாங்கூர் ராஜ வம்சத்தை சேர்ந்த ராணி கவுரி லட்சுமி பாய், நேற்று திடீரென்று வருகை தந்தார்.
பின்னர் கோவில் தலைமை சாமியார் ஸ்ரீலட்சுமி வரதீர்த்த சுவாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு கவுரி லட்சுமி பாய் நிருபர்களுக்கு பேட்டி:
"திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் கிடைத்துள்ள நகைகள் புதையல் அல்ல. அவை அனைத்தும் கடவுளுக்கு சொந்தமான சொத்து. பக்தர்களுக்கோ, அரசாங்கத்துக்கோ சொந்தமானது அல்ல. கோவில் சொத்து விஷயத்தில் அரசு தலையிட கூடாது. ராஜவம்சத்தினர் யாரும் இதற்கு உரிமை கோரவும் மாட்டார்கள்.
இப்பிரச்சினையில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். மேலும் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் மேற்கொண்டு எதுவும் பேச விரும்பவில்லை.
இப்போது கண்டு எடுக்கப்பட்டுள்ள நகைகளுக்கு அரச குடும்பம் உரிமை கோரவில்லை. இச்சொத்துக்களை போலீஸ் அல்லது கமாண்டோ மூலம் அரசு பாதுகாக்க வேண்டும்," என்றார்.