பத்மநாப சுவாமி கோவில் கிணற்றிலும் புதையல்: திருவிதாங்கூர் மன்னர் வம்சாவழி வரலாற்று நிபுணர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3 கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி இந்த கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டன. இதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே பத்மநாப சுவாமி கோவில் குளத்திலும் ஏராளமான புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், வரலாற்று ஆய்வாளருமான பிரதாப் கிழக்கே மடம் கூறி இருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்மநாபசாமி கோவில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்ட அகம விதிமுறைகளின் படி கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மொத்தம் 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோவிலைச் சுற்றி சிறிய, பெரியதுமாக 9 கோட்டைகள் உள்ளன.
கோவில் முக்கிய வாசல் முன்பாக பத்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்துக்குள் 9 கல் மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்குள் 6 ரகசிய அறைகள் உள்ளன. இதில் 5 ரகசிய அறைகளில் நகை குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது. அகம விதிபடி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள் உள்ளன. கோவில் குளத்துக்குள் 3 கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளே மீதி 3 ரகசிய அறைகளாக இருந்துள்ளன. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியிலிருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சால கிராமம் என்ற புனித கற்கள் கொண்டு வரப்பட்டன.
ஏராளமான யானைகள் மீது வைத்து இந்த கற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டன. இந்த கற்களை நேபாளத்தில் இருந்து திருவனந்தபுரம் கொண்டு வர இரண்டரை ஆண்டுகள் ஆகின. இந்த கற்களை வைத்துதான் பத்மநாபசாமி கோவிலில் உள்ள மூலவர் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலை அமைக்கப்பட்ட பிறகு மீதமுள்ள சால கிராம கற்களும், நகைகளும் குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே, கோவில் ரகசிய அறைகளில் இருப்பது போல இந்த கிணறுகளிலும் புதையல் இருக்கக்கூடும். இவ்வாறு பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார்.