அதிமுக செயற்குழு 20ம் தேதி சென்னையில் கூடுகிறது
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகிற 20ம் தேதி சென்னையில் உள்ள கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற 20.7.2011 புதன்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரை சந்தித்த வாஷிங்டன் போஸ்ட் நிர்வாகி:
இந் நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் சர்வதேச விளம்பரப் பிரிவு மேனேஜர் டயானா பக்லண்ட் இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கை வாஷிங்டன் போஸ்ட். அதன் சர்வதேச விளம்பரப் பிரிவு மேனேஜர் டயானா பக்லண்ட் இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.