தூத்துக்குடியில் முதலிரவில் புதுமணப்பெண் தற்கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதுமணப்பெண் முதலிரவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மகள் வள்ளியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி சத்தியா நகரைச் சேர்ந்த உப்பள தொழிலாளி ராம்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் சத்யா நகரிலுள்ள மாப்பிள்ளை வீட்டில் நேற்று நடந்தது.
முதலிரவுக்கான ஏற்பாடுகள் கோல்டன் நகரில் உள்ள பெண் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. இரவு 10 மணிக்கு முதலிரவு அறைக்குள் புதுப்பெண் வள்ளியம்மாள் சென்றார். அப்போது தனது கணவரிடம் தலைவலிப்பதாக கூறினார். அதற்கு அவர் வேண்டுமானால் உன் தாயுடன் சென்று படுத்துக்கொள் என கூறினார்.
வள்ளியம்மாளும் தனது தாயுடன் சென்று படுத்துக் கொண்டார். நள்ளிரவு 12 மணி அளவில் வள்ளியம்மாளை முதலிரவு அறைக்குள் சென்று கணவருடன் படுத்துக் கொள்ளுமாறு தாய் கூறினார். உடனே அவரும் முதலிரவு அறைக்குள் சென்று தரையில் படுத்துக் கொண்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வள்ளியம்மாள் முனங்கியபடி இருந்தார். உடனே கணவர் எழுந்து பார்த்தபோது வாயில் நுரை தள்ளியபடி வள்ளியம்மாள் கிடந்தார். அவரது அருகில் விஷ பாட்டில் கிடந்தது. உடனே அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.