கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்ததால் அரசிடமிருந்து தப்ப ராணுவத்துக்கு சங்கக்காரா ஜால்ரா!
கொழும்பு: இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிக்கெட் நிர்வாகம் ஊழல் மலிந்து போய்க் காணப்படுகிறது என்று கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சையில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்கக்காரா, தற்போது அதிருப்தியிலிருந்து தப்புவதற்காக தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைப் படையினரின் திறமையை பாராட்டிப் பேசியுள்ளார்.
இதையடுத்து சங்கக்காராவுக்கு ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபட்ச பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், லண்டனில் நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சங்கக்கரா, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஊழல் மலிந்து போய்க் காணப்படுவதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தது கிரிக்கெட் வாரியம். இதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் அது அறிவித்தது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தற்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சங்கக்காரா மீது கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சங்கக்காரா படு சாதுரியமாக ஒரு பிட்டைப் போட்டு விட்டார். விடுதலைப் புலிகளுக்கான எதிரான ராணுவத்தினரின் போராட்டத்தை பாராட்டி அவர் பேசியுள்ளார். இப்படிப் பேசினால் யாரிடமிருந்து பாராட்டு வரும் என்று சங்கக்காரா நினைத்தாரோ அதே போல வந்து விட்டது. சங்கக்காராவின் பேச்சுக்கு கோத்தபய பாராட்டு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
"சர்வதேச அரங்கில், இலங்கை ராணுவத்தை பாராட்டி எந்தவொரு விளையாட்டு வீரரும் பேசவில்லை. ஆனால், ராணுவத்தினரின் ஆற்றலை சங்கக்கரா பாராட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கோத்தபய கூறியுள்ளார்.
ராணுவம் - புலிகள் போர் குறித்து விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த யாருமே இலங்கை ராணுவத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ பேசவில்லை. அனைவரும் அமைதி காத்த நிலையில் சங்கக்கரா மட்டும் பகிரங்கமாக சிங்கள ராணுவத்தைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது பாராட்டுக்கு இப்படி ஒரு பின்னணி இருப்பதும் முக்கியமானது.