என்ஜீனியரிங் படிப்புகளுக்கு மோகம் அதிகரிப்பு- டாக்டராக விருப்பமில்லை!
சென்னை: மருத்துவப் படிப்பு வேண்டாம், என்ஜீனியரிங் படிப்புதான் தேவை என்று கோரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படித்தோமா, சட்டுப் புட்டென்று ஒரு வேலையில் உட்கார்ந்தோமா, கை நிறைய சம்பாதித்தோமா என்ற மன நிலைதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
என்ஜீனியரிங் படிப்புகளில் மட்டுமே இது சாத்தியம் என்பதால்தான் பெரும்பாலான மாணவ, மாணவியர் மருத்துவப் படிப்பை விட என்ஜீனியரிங் படிப்புகளை அதிகம் நாடுவதாக கூறப்படுகிறது.
மருத்துவப் படிப்பில் அப்படி இல்லை. எம்.பி.பி.எஸ். அல்லது பிடிஎஸ் படிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் வேலை பார்க்க வேண்டும். பிறகு மேல் படிப்பு படித்தால்தான் மட்டுமே நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நிலை. பெரும் செலவு செய்து படித்து விட்டு உடனடியாக வேலை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதே மாணவர்கள், மருத்துவத்தை விட பொறியியல் படிப்புகளை அதிகம் நாட முக்கியக் காரணம். மருத்துவத் துறை ஒரு சேவைத் துறை என்பதை ஏற்கும் மன நிலை இன்றைய மாணவ, மாணவியரிடம் இல்லையோ என்ற எண்ணமும் எழுகிறது.
தற்போது சென்னையில் நடந்து வரும் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் இதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. இரண்டிலும் தேர்வாகும் மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் வேண்டாம், பொறியியலே போதும் என்று கூறுவதை தினசரி காண முடிகிறது.
விளையாட்டுப் பிரிவில் மருத்துவக் கவுன்சிலிங்கில் முதலிடம் பிடித்த ஸ்குவாஷ் வீராங்கனை அனகா அலங்காமணி, மருத்துவத்தை நிராகரித்து விட்டு பொறியியல் படிப்பையே தேர்வு செய்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல, கே. ராஜேஸ்வர் பாரதி என்ற மாணவர், மருத்துவ படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.50 பெற்று தரவரிசைப் பட்டியலில் 140-ஆவது ரேங்க் பெற்றிருந்தார்.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வில் அவருக்குச் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. ஆனால், மருத்துவப் படிப்புக்காகக் கிடைத்த வாய்ப்பை உதறிவிட்டுத் தற்போது பொறியியல் படிப்பில் சேர அவர் முடிவு செய்துள்ளார்.
196.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுடன் மருத்துவ தரவரிசை பட்டியலில் 2320-வது இடத்தையும், வகுப்புவாரி பிரிவின் கீழ் 435-வது இடத்தையும் பெற்றிருந்த கே. அபினயாவுக்கு மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
அதேபோல, மருத்துவத் தர வரிசையில் 2948-வது இடத்தையும், வகுப்புவாரி பிரிவின் கீழ் 131-வது இடத்தையும் பெற்றிருந்த பி. பிரசாந்த்துக்குத் திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த மூன்று பேருமே பொறியியல் படிக்க விருப்பம் தெரிவித்ததால் அவர்களது விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன.
அங்கு நடந்த பிஇ கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த கல்லூரியைத் தேர்வு செய்தனர் இந்த மூவரும்.
கவுன்சிலிங்குக்கு வராதவர்களும் அதிகரிப்பு
மருத்துவம் வேண்டாம் என்று உதறி விட்டு பொறியியல் படிப்புக்கு வருவோர் ஒருபக்கம் இருக்க, பொறியியல் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டும் அதில் கலந்து கொள்ளாதோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 8-ல் தொடங்கியது. முதல் நாளில் 1,025 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். 718 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேருவதற்கான உத்தரவுகளை பெற்றுச் சென்றனர். 306 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற ஒருவர், இடத்தை தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டார்.
இரண்டாம் நாளில் அழைக்கப்பட்ட 2,913 பேரில், 2,404 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். 496 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 13 பேர் இடங்களை தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
மூன்றாம் நாளில் 3,097 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 436 பேர் பங்கேற்கவில்லை. 7 பேர் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து விட்டனர். 2,654 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் சேருவதற்கான உத்தரவுகளை பெற்றுச் சென்றனர். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, பொறியியல் படிப்புகளிலேயே இசிஇ எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜீனியரிங் பிரிவுக்குத்தான் நல்ல டிமாண்ட் உள்ளது.
அடுத்த கிராக்கி மெக்கானிக்கல் பிரிவுக்கு உள்ளது. கம்ப்யூட்டர் அறிவியல் படிப்புக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
இந்த வரிசையில் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு 5வது இடம் தான் கிடைத்துள்ளது.
அதேபோல தமிழ் வழி பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு யாருமே இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லையாம்.
ஆட்சி மாறியதும், மீடியத்தையும் மாற்றி விட்டார்கள் போல மாணவர்கள்...!