நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரூ. 1.5 லட்சம் கையாடல்: மேலாளர் கைது
நாங்குநேரி: நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் நாங்குநேரியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் இருந்து ரூ. 1.5 லட்சத்தை திருடிய மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் நாங்குநேரியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நேற்று மாலை திடீரென நாங்குநேரி சுங்கசாவடி அலுவகத்தில் தணிக்கை செய்ய வந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த திருச்சியைச் சேர்ந்த மேலாளர் ஆசைதம்பி குடிபோதையில் இருந்துள்ளார். தணிக்கைக்கு வந்த ஆடிட்டர் ஜெகதீஷ் என்பவரை தரக்குறைவாக பேசி மிரட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி ஆம்னி வேனில் சென்று விட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆடிட்டர் ஜெகதீஷ் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் நாங்குநேரி தாசி்ல்தார் மற்றும் போலீசார் அங்கு அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் கணக்கு பதிவேடுகள், பணம் கையிருப்பு ஆகியவற்றை சரிபார்த்தனர்.
அதில் 9-ம் தேதி ரூ.7 லட்சம், 10-ம் தேதி மாலை 4 மணி வரை ரூ. 4.6 லட்சம் என மொத்தம் ரூ.11.6 லட்சம் வசூலானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் கையிருப்பு ரூ.10 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 895 குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஆடிட்டர் ஜெகதீஷ் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமறைவான ஆசைதம்பியை கைது செய்து அவர் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.