ஆப்கானிஸ்தான்: மனித குண்டு தாக்குதலில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலியாயினர்.
இந்த ஆண்டு இறுதியில் ஆப்கானி்ஸ்தானில் இருந்து 1,000 வீரர்களை விலக்கிக் கொள்ள பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந் நாட்டு அதிபர் சர்கோசி சில நாட்களுக்கு முன் வெளியிட்ட நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கபிசா மாகாணத்தில் நேடோ படைத் தளத்தில் பிரான்ஸ் படையினர் முகாமிட்டுள்ளனர். இந் நிலையில் இன்று காலை இந்தத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பின் முன் பாய்ந்த வாலிபர், தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் ஒரு வாகனத்தி்ல் இருந்த பிரான்ஸ் படையினர் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
பிரான்ஸ் அதிபர் சர்கோஸி சில நாட்களுக்கு முன்புதான் ஆப்கானிஸ்தான் சென்று திரும்பினார். அங்குள்ள 4000 பிரான்ஸ் படை வீரர்களில் 1000 பேர் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று அங்கு அறிவித்தார். இந் நிலையில் பிரான்ஸ் படை வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 306 நேடோ வீரர்கள் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 69 பேர் பிரான்ஸ் வீரர்கள் ஆவர்.