மும்பை குண்டுவெடிப்புகள்: உஷார் நிலையில் ஹைதராபாத், திருப்பதி
ஹைதராபாத்: மும்பை குண்டுவெடிப்புகள் நடந்ததையடுத்து ஹைதராபாத், திருப்பதி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட ஆந்திராவின் முக்கிய நகரங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
நேற்று மாலை மும்பையில் 3 இடங்களி்ல் குண்டுகள் வெடித்தன. இதையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவில் ஹைதராபாத், திருப்பதி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ரயில்வே மற்றும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், பொது இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இரட்டை நகரங்களான ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் பல்வேறு இடங்களி்ல வாகனச் சோதனை நடத்தப்பட்டது.
போலீசார் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வரலாற்று சிறப்புமிக்க சார்மினார், சட்டசபை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனங்கள், பல கல்வி நிலையங்கள் உள்ள சைபராபாத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவில் உள்ள திருப்பதி மற்றும் துறைமுகம் உள்ள விசாகப்பட்டினம் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திர முதல்வர் என். கிரண் குமார் ரெட்டி நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசி மாநிலத்தை உஷார்படுத்துமாறு உத்தரவிட்டார்.
தற்போது டெல்லியில் உள்ள ஆந்திர டிஜிபி தினேஷ் ரெட்டி போலீஸ் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவிட்டார்.