அரசுப் பொறியாளருக்கு லஞ்சம் கொடுக்க கலெக்டர் அலுவலகம் முன்பு பிச்சையெடுத்த கான்டிராக்டர்!
நாகர்கோவில்: பஞ்சாயத்து யூனியன் உதவி நிர்வாக பொறியாளருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக கான்டிராக்டர் ஒருவர் கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் முன்பு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்தார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த கான்டிராக்டர் ஒருவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்திற்கு முன் திருவோட்டுடன் அமர்ந்து பிச்சை எடுத்தார். அவர் அருகில் பஞ்சாயத்து யூனியன் உதவி நிர்வாக பொறியாளருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும், பிச்சை போடுங்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டை ஒன்றை வைத்திருந்தார்.
உடனே போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடம் லஞ்சம் கேட்டவர்களின் விபரங்களைக் கேட்டறிந்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
முளகுமூடு கிராமத்தில் இந்த கான்டிராக்டர் ரூ. 45 ஆயிரத்திற்கு ரோடு போட்டுள்ளார். அதற்கான பில்லை சமர்பித்தும் அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலும் பணம் கொடுக்கவில்லை. 2 வகை பில்களைத் தயாரிக்குமாறும், பில்லுக்கான பணத்தை கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதற்கு பணம் இல்லாததால் தான் அவர் இப்படி நூதன முறையில் போராடியுள்ளார் என்றனர்.
நான் தரமான ரோடு போட்டுள்ளேன். எனக்கு கொடுத்த வேலையை நான் ஒழுங்காக முடித்துவிட்டேன். எனக்கே சிறிதளவு பணம் தான் கிடைக்கும். அதிலும் லஞ்சம் கேட்டால் நான் என்ன செய்வேன் என்று அந்த கான்டிராக்டர் கூறினார்.
கேரள மாணவி பலாத்கார வழக்கில் தலைமறைவாகியுள்ள இன்ஸ்பெக்டரை கண்டுபிடிக்குமாறு கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் இந்த கான்டிராக்டர் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.