70 ஆயிரம் கோடி செலவில் 'செயில்' உருக்காலை விரிவாக்கம்
சனிக்கிழமை காலையில், சேலம் இரும்பாலை திட்டப்பணிகளை ஆய்வு செய்த செயில் நிறுவனத் தலைவர் சி.எஸ்.வர்மா கூறுகையில், "செயில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ரூ.70 ஆயிரம் கோடியில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டில் 14,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்," என்றார்.
ரூர்கேலா, இஸ்கோ, பிலாய் ஆகிய மூன்று உருக்காலைகளில் அதிநவீன உலைக்களன் அமைக்கும் பணிகள் இந்தாண்டுக்குள் நிறைவு பெறும். சேலம் உருக்காலைக்காக, காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
"நிலக்கரி விலை உயர்வு விரைவில் சீரடையும். அதனால் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. நமது நிலக்கரித் தேவையில் சுமார் 75 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே பெறுகிறோம். நம் தேவையில் உள்நாட்டு உற்பத்தி 25 சதவீதமே. தடையில்லா நிலக்கரி பெறுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
சுரங்கத்தின் பெரும்பான்மை பங்குகள் பெற்று நம் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு 3 நிறுவனங்களிடம் பேசி வருகிறோம்," என்றார் சிஎஸ் வர்மா.