சென்னை மாநகராட்சித் தேர்தலில் 75 வார்டுகளில் போட்டியிட பாமக முடிவு
சென்னையில் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற முடியாத கூட்டணியில் இருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பா.ம.க.வுக்கு எதிரான வாக்குகள் அல்ல. தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நடுநிலையாளர்கள் புதிய வாக்காளர்கள், இளைஞர்கள் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வாக்களித்தார்கள். தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம்.
குறிப்பாக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 27-ந்தேதி மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதம் செய்ய இருக்கிறோம்.
இந்த தேர்தலில் 18 தொகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று உள்ளோம். அப்படியிருந்தும் தோல்வி அடைந்தோம். 1991-ல் தி.மு.க. ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது. 96-ல் அ.தி.மு.க. 2 இடத்தில் வெற்றி பெற்றது. எனவே அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். வரும் காலத்தில் பா.ம.க.வின் பயணம் வேகமாக இருக்கும். இன்னும் வித்தியாசமான போக்கை காண்பீர்கள் என்றார்.
கூட்டத்தில்,
உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் குறைந்தது 75 வார்டுகளில் தேர்வு செய்து அதில் போட்டியிடுவது, அங்கு கட்சிப் பணிகளை வேகப்படுத்துவது.
பா.ம.க. இளைஞர் சங்கத்தை வலுப்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும் 25 வயதுக்குட்பட்ட 10-ம் வகுப்பு தேறிய 500 பேரை உறுப்பினராக சேர்ப்பது.
தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் செலவழிப்பதை தடுக்க அரசியல் கட்சிகளும் தேர்தல் செலவுகளும் என்ற தலைப்பில் மாவட்டம் வாரியாக கருத்தரங்கம் நடத்துவது. முதல் கருத்தரங்கம் 24-ந் தேதி வேளச்சேரியில் நடக்கிறது. டாக்டர் ராமதாஸ் பேசுகிறார்.
வருகிற 25-ந் தேதி பசுமை தாயகம் சார்பில் விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலியை மெரினா கடற்கரையில் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.