கோமாவில் மூழ்கினார் ஹோஸ்னி முபாரக்: வழக்கறிஞர் தகவல்
ஹோஸ்னி முபாரக்(83) எகிப்து அதிபராக இருக்கையில் அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அவரும் தன்னாள் இயன்ற வரை மக்களை அடக்கி ஒடுக்க முயன்றார். இறுதியில் மக்கள் சக்தி வென்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இந்த போராட்டதின்போது 840 பேரை ராணுவத்தினர் கொன்றனர்.
பதவியில் இருந்து விலகிய பிறகு முபாரக், அவரது மகன்கள் அலா, காமல் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கொலை வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையின்போது முபாரக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை செங்கடல் பகுதியில் உள்ள ஷார்ம் எல் ஷேக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலை சரியில்லாததால் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமாகி கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், அவரை சுயநினைவுக்கு கொண்டுவர மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும் முபாரக்கின் வழக்கறிஞர் பரித் எல்-தீப் நேற்று தெரிவித்தார். ஆனால் வழக்கறிஞர் சொல்வதில் உண்மையில்லை என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஆசெம் அஷ்ஸாம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஹோஸ்னி முபாரக் நன்றாக இருக்கிறார். ரத்த அழுத்தம் குறைந்ததால் சிறிது மயக்கம் ஏற்பட்டதே தவிர அவர் கோமாவிற்கெல்லாம் செல்லவில்லை. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என்றார்.
முபாரக் மீதான வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி துவங்குவிருக்கும் நிலையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.