சீமான் மீது விஜயலட்சுமி கூறிய புகார் குறித்து விசாரணை- கமிஷனர் தகவல்
இயக்குநர் சீமான் தன்னுடன் 3 ஆண்டு காலம் நெருங்கிப் பழகியதாகவும், ஆனால் தற்போது தன்னை ஏமாற்றி விட்டதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் பரபரப்பு புகாரைத் தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி.
மேலும், தான் சீமானுடன் குடும்பம் நடத்தியுள்ளதாகவும், மதுரையில் அவருடன் 15 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறிய விஜயலட்சுமி சமீபத்தில் சில போட்டோக்களையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் தான் கொடுத்த புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டை அணுகப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால் விஜயலட்சுமியின் புகார்களை சீமான் மற்றும் அவரது தரப்பு மறுத்திருந்தது.
இந்த நிலையில், விஜயலட்சுமி கொடுத்த புகார் மீதான நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம் கேட்டனர்.அதற்கு பதிலளித்த அவர், விஜயலட்சுமி கொடுத்த புகார் குறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
நித்தியானந்தா குறித்து விசாரணை
இதேபோல நித்தியானந்தா மீது இந்து மக்கள் கட்சி கொடுத்த புகார் குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் கமிஷனர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தன் மீதான பாலியல் குற்றங்களை மறைக்க இந்து மதத்தைத் துணைக்கு அழைக்கிறார் நித்தியானந்தா. இதனால் இந்துக்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார் கமிஷனர் திரிபாதி.