நேற்று கோமாவில் விழுந்து இன்று மீண்டார் ஹோஸ்னி முபாரக்!
கெய்ரோ: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கோமாவில் இருந்து மீண்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹோஸ்னி முபாரக்(83) எகிப்து அதிபராக இருக்கையில் அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அவரும் தன்னாள் இயன்ற வரை மக்களை அடக்கி ஒடுக்க முயன்றார். இறுதியில் மக்கள் சக்தி வென்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இந்த போராட்டதின்போது 840 பேரை ராணுவத்தினர் கொன்றனர்.
பதவியில் இருந்து விலகிய பிறகு முபாரக், அவரது மகன்கள் அலா, காமல் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கொலை வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையின்போது முபாரக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை செங்கடல் பகுதியில் உள்ள ஷார்ம் எல் ஷேக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலை சரியில்லாததால் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி அவரது உடல்நிலை மோசமாகி கோமாவிற்கு சென்றுவிட்டதாகவும், அவரை சுயநினைவுக்கு கொண்டுவர மருத்துவர்கள் முயற்சிப்பதாகவும் முபாரக்கின் வழக்கறிஞர் பரித் எல்-தீப் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கோமாவில் இருந்து மீண்டு சுயநினைவுடன் இருப்பதாக மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
முபாரக் மீதான வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி துவங்குவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.