சாய்பாபா ஆசிரமத்தில் தங்க, வெள்ளி, பணக் குவியல்கள் கண்டுபிடிப்பு
புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய்பாபாவின் ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவை எண்ணப்பட்டு வருகிறது. பாபாவின் தனி அறையான யஜுர் மந்திரில் உள்ள சொத்துக்கள் நேற்று காலை முதல் சுமார் 12 மணி நேரம் கணக்கிடப்பட்டது. அப்போது 34.5 கிலோ தங்கம், 340 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 1.90 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சாய் அறக்கட்டளை அதிகாரிகள் முன்பு இன்றும் தொடர்ந்து சொத்துக்கள் கணக்கிடப்படுகிறது.
இது குறித்து அனந்தபூர் மாவட்ட கலெக்டர் துர்காதாஸ் நேற்றிரவு கூறியதாவது,
காலை 10-45 மணிக்கு சொத்துக்கள் எண்ணும் பணி துவங்கியது. இது சுமார் 12 மணி நேரம் நடந்தது. இதற்கு முன்பு திறக்கப்படாத 6 அறைகள் திறக்கப்பட்டன. அதில் நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
தங்க வளையள்கள், கம்மல்கள், வெள்ளிக் குவளைகள், வெள்ளிப் பாத்திரங்கள், கரண்டிகள், பூஜை பொருட்கள், விலை உயர்ந்த புடவைகள், சட்டைகள், பேண்ட்கள் மற்றும் பிற பரிசுப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்று விலை உயர்ந்த பொருட்கள் மேலும் பல அறைகளில் இருக்கக்கூடும் என்று நம்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 16-ம் தேதி தான் முதன்முதலாக சொத்துக்கள் எண்ணப்பட்டது. அப்போது ரூ. 11.56 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம் மற்றும் தங்க நகைகள், 307 கிலோ வெள்ளிப் பொருட்கள் கிடைத்தன. இரண்டாவது முறையாக கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டபோது ரூ. 76 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கிடைத்தன.
இன்றும், நாளையும் தொடர்ந்து சொத்துக்கள் எண்ணப்படுகிறது. ஆசிரமத்தில் உள்ள மேலும் பல அறைகளில் இருந்து புதையல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.