சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வு!
மும்பை: சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியதால், இந்திய பங்குச் சந்தையிலும் இன்று முன்னேற்றம் காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 146.83 புள்ளிகள் அதிகரித்து 18,653.87 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரத்தில் இதுவே அதிகபட்ச உயர்வாகும்.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே முன்னேறே்ற நிலை தொடர்ந்தது. சர்வதேச வர்த்தகப் போக்கு மற்றும் ஐடி - வங்கித் துறைப் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறியதால் சுறுசுறுப்பான வர்த்தகம் நடந்தது.
எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி, பெல், ஐசிஐசிஐ பேங்க், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, விப்ரோ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
டாடா மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி பேங்க், இந்துஸ்தான் யூனிலீவர், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
தேசிய பங்குச்சந்தையிலும் உயர்வு காணப்பட்டது. குறியீட்டெண் நிஃப்டி 46.50 புள்ளிகள் அதிகரித்து 5613.55 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.