குண்டுவெடித்த ஒபேரா ஹவுஸில் ரூ. 25 கோடி மதிப்பிலான 65 வைரக் கற்கள் கண்டெடுப்பு
மும்பை: குண்டுவெடித்த ஒபேரா ஹவுஸ் பகுதியில் இருந்து ரூ. 25 கோடி மதிப்புள்ள 65 வைரக் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 13-தேதி மும்பையின் 3 முக்கிய இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் வைர வியாபாரத்திற்கு பெயர் போன ஒபேரா ஹவுஸும் ஒன்று. குண்டு வெடித்தபோது வைரக் கற்கள் சிதறின. இந்நிலையில் நேற்று ரூ. 25 கோடி மதிப்புள்ள 65 வைரக் கற்கள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மும்பை வைர வியாபாரிகள் சங்க உறுப்பினர் சஞ்சய் ஷா கூறுகையில், "நேற்று ஒபேரா ஹவுஸ் பகுதியை மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் சுத்தம் செய்தனர். அப்போது 65 வைரக் கற்கள் கிடைத்தன. உடனே அவை போலீசில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வைரங்கள் குஜராத்தில் இருந்து வந்து இங்கு வியாபாரம் செய்பவர்களுடையது என்று நாங்கள் நினைக்கிறோம். சூரத் மற்றும் பாவ்நகர் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் வைரங்களை சிறு வியாபாரிகள் மும்பை கொண்டு வந்து விற்பனை செய்வர். இதுபோன்று மேலும் பல வைரக்கற்கள் குப்பைகளில் கிடக்கலாம்," என்றார்.