சிதம்பரம் கோயிலில் புதையலா?: 'சிதம்பரம் ரகசியம்தான்'-தீட்சிதர்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுரங்கமும் இல்லை, புதையலும் இல்லை என்று கோயில் பொது தீட்சிதர்களில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பல்வேறு இடங்களில் புதையல் உள்ளது என்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
கோயிலை தொன்றுதொட்டு நிர்வகித்து வரும் தில்லைவாழ் அந்தணர்கள் கோயிலை பல ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர்.
இந்தக் கோயிலில் புதையல் என்று நாம் நினைப்பது சிதம்பரம் ரகசியம்தான். இது தத்துவ நிலையில்தான் புரியும்.
இது புரியாமல் அங்கே புதையல் இருக்கிறது என கூறுபவர்கள் கோயில் சொத்தை கொள்ளை அடித்தவர்கள்தான். கோயிலின் நூற்றுக்கால் மண்டபம் பல ஆண்டுகளாக இடிந்துவிழும் நிலையில் இருப்பதால் அந்த இடத்தை பூட்டி வைத்திருகிறோம்.
சோழர் பரம்பரை எனச் சொல்லிக் கொள்பவர்கள் கோயிலில் நந்திக்கு கீழும், கர்ப்பகிரகத்தின் கீழும் புதையல் உள்ளது என்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் கூறுவது வாடிக்கையாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது.