புளியங்குடியில் பள்ளிவாசலுக்கு தீ வைப்பு: ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
புளியங்குடி: புளியங்குடியில் தவ்ஹீத் ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசலை தீ வைத்து எரி்த்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
புளியங்குடியில் காயிதே மில்லத் நகர் 4வது தெருவில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளையின் தற்காலிக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 8 மாதமாக இங்கு தான் செயல்பட்டு வருகிறது. இதில் மஜ்தூர் ரஹ்மான் என்ற பள்ளிவாசல் கூரை செட்டில் இருந்தது. இங்கு தினமும் 5 வேளை தொழுகை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென இந்த பள்ளிவாசல் தீப்பற்றி எரிந்தது. அப்பகுதியினர் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மைக் செட், சேர்கள், மின்விசிறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளை நிறுவனர் செய்யது அலி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.