கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரகளை செய்த அதிமுக மகளிர் அணி செயலாளர் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட தூத்துக்குடி அதிமுக மகளிர் அணி இணை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பாலு என்பவர் பொது மக்களுக்கு ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்டவற்றை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் கவுசல்யா ஒரு குறிப்பிட்ட சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அது குறித்த விவரங்களை சரிபார்த்த பின் சான்றிதழை வழங்குவதாக அதிகாரி பாலு கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாலுவுக்கு ஆதரவாக அவரது சக ஊழியர்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பாலு இந்த சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் அரசு ஊழியரை அவதூறாக பேசுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பிரிவின் கீழ் தூத்துக்குடி அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் கவுசல்யாவை போலீசார் கைது செய்தனர்.
இப்பிரச்னையால் தாலுகா அலுவலகத்தில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் கவுசல்யாவை போலீசார் கைது செய்த சம்பவத்தால் தூத்துக்குடி அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.